தென்கிழக்கு ஈரானில் உள்ள ஈரான்ஷாஹர் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து வசதிகள் கட்டிடம் மற்றும் வானிலை ஆய்வு நிலையம் ஆகியவற்றின் மீது எறிகணைகள் தாக்கியதில், இரண்டு கட்டமைப்புகளும் சேதமடைந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசரக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், ஆனால் பணியில் இருந்த தீயணைப்பு வீரர் காலித் காதேரி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதன்மைத் தளபதியின் உத்தரவின் பேரில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறனை மேலும் சீர்குலைக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளைப் படைகள் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளன” என குறிப்பிட்டுள்ளது.
முதலில் ஈரானின் பந்தர் அப்பாஸ், சிரிக் ஆகிய இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து, ஈரானின் தெற்குப் பகுதியில், அதன் வளைகுடாக் கடற்கரைக்கு அருகிலுள்ள இரண்டு இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
மேலும், கொனாரக் மற்றும் சபாஹார் அருகே வெடிப்புச் சத்தங்கள் பதிவானதாகவும் சற்று முன்னர் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், ஈரான் மீது மற்றொரு கட்டத் தாக்குதல்களை நடத்தியதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
ஈரானின் தெற்குத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் எட்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், அதன் விளைவாக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான தெரிவித்துள்ளது.
பதற்றம் நிலவிவரும் ஹோர்முஸ் நீரிணையின் முழுக் கட்டுப்பாடும் தமது வசமே இருக்கும் எனவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பணியப் போவதில்லை எனவும் ஈரான் அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.