அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அதேபோன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தி அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்த அமெரிக்காவை கண்டிப்பதற்கு ஜனாதிபதி உள்ளி்ட்ட அரசாங்கம் அச்சப்படுவதையிட்டு முஸ்லிம் சமூகம் கவலையடைகிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(5) இடம்பெற்ற மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்துகொள்வதற்காக ஜனநாயக நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே ஈரான் மீதும் தாக்குதல் நடத்தி, அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு முன்னர் ஈராக்கில் தலையிட்டு அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து இல்லாமல் செய்தார்கள். லிபியாவில் தலையிட்டு மொஹமட் கடாபியை இல்லாமல் செய்தார்கள். வெனிசுலாவில் அத்துமீறி தலையிட்டு, அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து, அமெரிக்காவில் வைத்திருக்கிறார்கள். இது எந்தவகையில் நியாயமாகும்.
அதேநேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையும் கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் காரணமாக இன்று மத்திய கிழக்கில் அமைத்தியற்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் பணிபுரிந்து வரும் 10 இலட்சத்துக்கும் அதிகமான எமது இலங்கையர்களின் தொழில் கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு ஆளும் தரப்பினர் அச்சப்படுகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்பில் கதைப்பதாக இருந்தால் இவர்களின் தொடை கடுங்குகிறது. இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் எதிராக பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதன் ஆன்மிக தலைவரை கொலைசெய்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயலை கண்டிப்பதற்கு அச்சப்படுவதையிட்டு, முஸ்லிம் சமூகம் கவலையடைகிறது.
அதனால் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்து, அமெரிக்காவின் இந்த படுகொலையை அரசாங்கம் கண்டிக்கவேண்டும். குறிப்பாக ஈரானில் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கொலை செய்திருக்கும் இந்த செயலைக்கூட ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிக்க முடியாத அளவுக்கு இவர்கள் அச்சப்படுகிறார்கள் எனறார்.