சூறாவளியினால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்கு பிந்தைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பலதரப்பட்ட பொதுச் சேவைகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இன்று (28) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்குத் தேவையான சேவைகளைத் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்யவும், முக்கியமான பொதுச் செயற்பாடுகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும் இந்தப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் அரச கூட்டுத்தாபனங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களினால் வழங்கப்படும் முக்கிய துறைசார் சேவைகளை உள்ளடக்கியுள்ளது.
அத்தியாவசியமாக்கப்பட்ட முக்கிய சேவைகள்:
-
மின்சார விநியோகம்.
-
பெட்ரோலியம் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம்.
-
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு.
-
பொதுப் போக்குவரத்து.
-
தொலைத்தொடர்பு மற்றும் ஊடகச் சேவைகள்.
-
நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் விவசாய காப்பீட்டுச் சேவைகள்.
-
வைத்தியசாலைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் மருந்தகங்களில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட சுகாதாரச் சேவைகள்.
-
கினி அணைப்பு, கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவுநீர் அகற்றல் சேவைகள்.
மேலும், ஆம்புலன்ஸ் சேவைகள், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கி மற்றும் காப்பீட்டுச் சேவைகளும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
கள மட்ட அதிகாரிகளுக்கான உத்தரவு:
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள், சமூக வலுவூட்டல் அதிகாரிகள் மற்றும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) மத்திய குழு அதிகாரிகள் உள்ளிட்ட கள மட்ட அதிகாரிகளும் அத்தியாவசிய சேவை வகையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரதங்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான சேவைகள், அத்துடன் தாழ்நிலங்களை மீளப் பெறுதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் போன்ற பணிகளும் அத்தியாவசியமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த உத்தரவில் ஜனாதிபதி 2026 மே 28 ஆம் திகதி கையொப்பமிட்டுள்ளார்.