சென்னை
காவல்துறையின் சேவைகளை மக்கள் மிக எளிதாகப் பெறவும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தாம்பரம் வாட்ஸ்காப்’ (Tambaram What’s Cop) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) வாட்ஸ்அப் சாட்பாட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சேவையைப் பயன்படுத்தப் பொதுமக்கள் 9344-222-100 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்தச் சேவையை மக்கள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘தாம்பரம் வாட்ஸ்காப்’ சேவையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
-
பெண்கள் பாதுகாப்பு (Track My Journey): தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் தங்களது பயண விவரங்களை இதில் பதிவு செய்யலாம். பயணத்தில் எதிர்பாராத தாமதம் அல்லது வழிமாற்றம் ஏற்பட்டால், காவல்துறையினர் உடனடியாகத் தொடர்புகொண்டு பாதுகாப்பை உறுதி செய்வார்கள். மேலும், அவசரக் காலங்களில் ‘Live Location’ அனுப்பி உடனடியாக போலீஸ் உதவியைப் பெறலாம்.
-
ரகசியப் புகார் (Anonymous Information Sharing): போதைப்பொருள் விற்பனை, சமூக விரோதிகளின் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பொதுமக்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் புகார் அளிக்கலாம்.
-
பூட்டிய வீடுகளுக்குப் பாதுகாப்பு (Locked House Registration): வெளியூர் அல்லது நீண்ட நாட்கள் பயணம் செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடு பூட்டியிருக்கும் விவரத்தை இதில் பதிவு செய்தால், இரவு ரோந்து செல்லும் காவலர்கள் அந்த வீடுகளைத் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
-
இரவு நேரக் காவலர் (Know Your Night Rounds Officer): இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உங்கள் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரியின் தொடர்பு எண்ணை எளிதாகப் பெற்று, அவசரத் தேவைக்கு உடனடியாக அழைக்கலாம்.
-
டிஜிட்டல் சேவைகள்: சைபர் குற்றப் புகார்கள், போக்குவரத்து விதிமீறல்கள் (புகைப்படம் மற்றும் Geo-tag வசதியுடன்), தொலைந்து போன செல்போனைக் கண்டுபிடிக்கும் CEIR இணையதளச் சேவை மற்றும் அருகில் உள்ள காவல் நிலையத்தை எளிதாகக் கண்டறியும் வசதி ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த எண்ணுக்கு நேரடியாக போன் கால் செய்ய முடியாது; வாட்ஸ்அப் மெசேஜ் அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற வேண்டும் எனத் தாம்பரம் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
#TambaramPolice #WhatsCop #WomensSafety #TamilNaduPolice #Tambaram #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #AIinPolice #WomenEmpowerment #TNNewsUpdates