அரசாங்கம் வளமான நாட்டை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையை வைத்திருந்தபோதிலும், மக்கள் வறுமையின் சுமையைச் சுமக்க நிர்பந்திக்கப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் (URF) தலைவர் சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய ரணவக, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் கடினமாக்கியுள்ளதாகக் கூறி, அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் தளர்த்தி அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கம் வளமான நாடொன்றை உருவாக்குவது பற்றிப் பேசினாலும், மக்கள் வறுமையின் சுமையைச் சுமக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
டீசல் எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறும் ரணவக அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார். இந்த வரி விதிப்பு மின்சாரக் கட்டணத்தில் நேரடித் தாக்கத்தைச் செலுத்துவதுடன், வாழ்க்கைச் செலவை மேலும் உயர்த்துகிறது என்றும் அவர் வாதிட்டார்.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைப்பது நாடு முழுவதும் உள்ள வீடுகள் எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தைத் தணிக்க உதவும் என்று அவர் கூறினார்.