கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரண்டாவது நாளாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நிலத்துடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு கலாசாரம் எமக்குள்ளது. என்று ஹிரிகம காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அநுராதபுரத்தில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். பாராட்டுகின்றேன். இதனைத்தான் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலப்பறிப்பினாலேயே விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்தகால ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுக்க மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்நேரம் இப்போதைய ஜனாதிபதி நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையுடனும் ஒருபகுதி மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் சமயம் இது.
ஆனால் வவுனியாவடக்கு, முல்லைத்தீவு, தையிட்டி. வலிவடக்கு, கேப்பாப்புலவு, முள்ளிக்குளம், திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு என வடக்கு கிழக்கெங்கும் தமது நிலமீட்பிற்காகத்தான் தமிழ்மக்கள் உரமாகப் போராடுகின்றார்கள். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்களுக்கும் தமது நிலம் தமது உறவுகளின் பின்னிப்பிணைந்த கலாசாரத்துடனான பூர்வீகத் தமிழ் மண்தான் என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
ஜனாதிபதி அநுராதபுரத்தில் உரை நிகழ்த்திய அதே நாளில் கடந்த முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி என்னும் இடத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
அந்தக்காணிகள் தமிழ்மக்களுடைய பூர்வீக தனியார் அறுதி உறுதிக் காணிகளாகும். நில அளவையாளர் நாயகத்தினால் அளந்து வரையப்பட்டு, பேணப்பட்டுவரும் (Top off pp 70 இலக்க) வரைபடத் தொகுதியில் தனியார் காணியாகவும், மேய்ச்சல் தரை நிலங்களாகவும் உள்ளன.
எனவே மகாவலி அதிகாரசபைக்கு அந்த நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அதிகார எல்லைக்குட்பட்ட இந்த தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளைத் திருடி சிங்கள வர்த்தகருக்கு குத்தகைக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மகாவலி அதிகாரசபையிடமிருந்து தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளை சட்டவிரோதமாகக் குத்தகைக்குப் பெற்றுள்ள அந்தநபர், அந்தக் காணியில் உப்பளம் அமைக்கும் வேலையைத் தொடங்கியதால் அங்கு ஒரு அமைதிக்குலைவு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்ததது.இவ்வாறான இனவிரோத செயற்பாட்டைச் செய்தது மகாவலி அதிகாரசபையே .
இவ்வாறான இனவிரோத செயற்பாடு தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்திலே மகாவலி அதிகார சபையினால் வடக்கிற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் அப்பகுதி தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் கிராமப்பெயர்களை சிங்களப் பெயராக மாற்றி அங்கு சிங்களமக்களைக் குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன மகாவலியின் இத்தகைய அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையும், சமாதானக் குலைவும் ஏற்படுகின்றது.
எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.