இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் விஜயதாஸ ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுடன் விஜயதாஸ ராஜபக்ஷவின் இல்லத்திற்குச் சென்ற விக்ரமசிங்க, அவரது நலன் குறித்து விசாரித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘சண்டே டைம்ஸ்’ அறிக்கையின்படி, தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நடூன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தில் முறையான சட்ட வழிமுறைகளே பின்பற்றப்பட்டதாக அங்கு கூடியிருந்தவர்களிடம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அக்காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தான், ‘ஹரக் கட்டா’ தொடர்பான ஆவணங்கள் உட்பட அனைத்துப் பொருத்தமான ஆவணங்களையும் தனது ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்திற்குச் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிநபரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ‘ஹரக் கட்டா’வை விஜயதாஸ ராஜபக்ஷ தவறான முறையில் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டுகளையும் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். அரச காவலில் உள்ள ஒரு நபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருவது, கைதிகளைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்குவதற்கும் அரசாங்கத்திற்குள்ள பொறுப்புடன் ஒத்துப்போகும் ஒரு விடயமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கொன்றில் செல்வாக்கு செலுத்துவதற்காகப் பணம் கோரப்பட்டதாகக் கூறப்படும் காலப்பகுதியில், விஜயதாஸ ராஜபக்ஷவும் அவரது மகனும் டுபாயில் தங்கியிருந்தமை தெரியவந்ததை அடுத்து, தற்போது விஜயதாஸ ராஜபக்ஷவிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வார தொடக்கத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.
முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் டுபாயில் தங்கியிருந்தமைக்கும், குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த சட்டவிரோதச் செயலுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைத் கண்டறிய புலனாய்வாளர்கள் முயன்று வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.