யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாதத்திற்குள் நீதிமன்றில் முன்னிலையாகாவிடின் அவர்களது சொத்துக்களை முடக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் சந்தேக நபர்களின் வசிப்பிடங்களிலும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பத்திராஜா, யாழ்ப்பாணம் தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி இந்திக்க, ஆகியோரின் நேரடி பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை நேற்று(11.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற கட்டளை காட்சிப்படுத்தப்பட்ட நாளில் இருந்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலோ யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்திலோ காலை 9 மணி முதல் 3 மணிக்கு இடையில் தோன்றுமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டகோவையின் பிரகாரம் மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
அவ்வாறு முற்பட தவறும் பட்சத்தில் குறித்த நபரின் அசையும் அசையா சொத்துக்களை முடக்கும்படி மன்று கட்டளையிட்டுள்ளது. இந்நிலையில், பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் ஒட்டப்பட்டதுடன் பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.