தற்போது நிலவும் மோசமான வானிலைச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும், பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
எனினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழமையான முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பல்கலைக்கழக நிர்வாகம் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது:
தங்களது சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லக்கூடிய மாணவர்கள், அவ்வாறு புறப்பட்டுச் செல்லலாம்.
மோசமான வானிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல இயலாத மாணவர்கள், சரஸ்வி மெதுர (Sarasavi Medura) விடுதியைத் தவிர, தாங்கள் தங்கியிருக்கும் பல்கலைக்கழக விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்து அங்கு தொடர்ந்து தங்கியிருக்கலாம்.
ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் (Boarding Places) தங்கியிருக்கும் மாணவர்கள், பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருமானால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளைப் பராமரிக்குமாறு விடுதி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு மாணவரும் பல்கலைக்கழக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்பதையும் பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்துகிறது.
வானிலை நிலைமை சீராகும் வரை, பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.