மொனராகலை, ஆகஸ்ட் 21:
மொனராகலை, கும்புக்கன் பகுதியில் இன்று (21) அதிகாலை வேளையில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவாயா – மொனராகலை வீதியின் களு பாலத்திற்கு அருகில், வெள்ளவாயா திசையை நோக்கிப் பயணித்த டிப்பர் லொறியொன்றும், எதிர் திசையில் வந்த டிராக்டரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் டிராக்டரின் பெட்டியில் (Trailer) 10 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோதலின் போது தீவிர காயமடைந்த 8 பேர் உடனடி சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தள மற்றும் ஹோரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஏனைய மூவர் மொனராகலை வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக டிப்பர் லொறியின் சாரதி மற்றும் டிராக்டர் சாரதி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.