நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ் கடந்த முதலாம் திகதி முதல் ‘போதைப்பொருள் தடுப்பு வாரம்’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை (04) கொழும்பு – இராஜகிரியவில் இடம்பெற்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகம் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த விசேட நிகழ்ச்சி, இராஜகிரிய ஹேவாவிதாரண மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சரியான புரிதல் மற்றும் மனப்பாங்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர், கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைவது மட்டுமல்ல எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“போதைப்பொருள் போன்ற அழிவுகரமான விடயங்கள் குறித்து மாணவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களிடம் சிக்காமல் இருக்க, ‘ஆம்’ என்று சொல்வதைப் போலவே ‘இல்லை’ அல்லது ‘முடியாது’ என்று சொல்லத் தேவையான ஆத்ம பலத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”
கல்விச் செயற்பாடுகளுடன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எவ்வாறு ஆளுமைத் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் கல்வி மற்றும் தகவல் அதிகாரி மஹேஷி மதுசங்கா மற்றும் உதவி ஆலோசனை அதிகாரி உதேஷிகா லக்மாலி ஆகியோர் பிரதான வளப்பங்களிப்பை வழங்கி விரிவுரைகளை நிகழ்த்தினர்.
இந்தநிகழ்வில் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலாளர் கசுன் ஏபா செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அரசாங்க ஊழியர்களுக்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சும், கோட்டே பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாமும் கோட்டே பிரதேச செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.