ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகிய பிரித்தானிய தம்பதியினரின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நிலவி வரும் சூழலில், ஈரானிய அதிகாரிகள் இந்தத் தம்பதியினரை வேண்டுமென்றே போர் அபாயம் உள்ள பகுதிகளில் தடுத்து வைத்து, அவர்களை ‘மனிதக் கேடயங்களாக’ பயன்படுத்துவதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிளில் உலகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது ஈரானில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தங்கள் மீதான உளவு குற்றச்சாட்டுகளை அவர்கள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தனது நாட்டு குடிமக்களை விடுவிக்கத் தவறிவிட்டதாகவும் ஃபோர்மேன் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் எவின் சிறைச்சாலை (Evin Prison) போன்ற முக்கியமான இடங்களுக்கு அருகில் குண்டுகள் வெடிப்பது தம்பதியினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவோ அல்லது விடுவிக்கவோ இங்கிலாந்து அரசு உடனடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர்களது மகன் ஜோ பென்னட் மற்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.