கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்திலுள்ள பெம்பர்டன் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, அங்குள்ள பூங்கா ஒன்றிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளுக்கு அவசரகால வெளியேற்ற எச்சரிக்கையும் (Evacuation alert) விடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் அலட்சியச் செயல் காரணமாக உருவான இந்த காட்டுத்தீ, கடந்த புதன்கிழமை பிற்பகல் 99 ஆவது நெடுஞ்சாலையிலிருந்து (Highway 99) 5 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டது. பி.சி. காட்டுத்தீ சேவை அமைப்பின் (B.C. Wildfire Service) தகவல்படி, இந்தத் தீ இதுவரை 10 ஹெக்டேர் பரப்பளவைச் சாம்பலாக்கியுள்ளது.
இந்த அவசரகால வெளியேற்ற உத்தரவுகளும் எச்சரிக்கைகளும் பெம்பர்டன் கிராம நிர்வாகம் மற்றும் குவாமிஷ்-லில்லூயெட் பிராந்திய மாவட்டத்தினால் (Squamish-Lillooet Regional District) புதன்கிழமை நள்ளிரவில் பிறப்பிக்கப்பட்டன.
தீயணைப்புப் படையினர் எந்தவித இடையூறுமின்றி பாதுகாப்பாகப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பொதுமக்கள் யாரும் ‘ஒன் மைல் லேக் பூங்காவிற்குள்’ (One Mile Lake Park) நுழைய வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நள்ளிரவுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட சமீபத்திய தகவலில், தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் ஊற்றி தீயை அணைக்கும் ஒரு பிரத்யேக விமானம் (Air tanker) ஆகியவை தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், குழுக்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணியாற்றும் என்றும் பி.சி. காட்டுத்தீ சேவை அமைப்பு தெரிவித்துள்ளது