மதுரை
பழனி கோயில் அடிவாரத்தில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி கோயில் அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம், கடந்த மாதம் 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தனி நபர்களுக்கு முறைகேடாகக் கிரையப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மெகா மோசடி விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) மற்றும் இவர்களுக்கு உதவிய பழனியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இவர்களைப் போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் நால்வரும், ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சார்பதிவாளருக்கும் நெஞ்சுவலி:
இதற்கிடையே, இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் நெஞ்சுவலி காரணமாகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை மருத்துவமனையிலேயே நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நேரில் சென்று உத்தரவிட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகே அவர் மதுரை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான இருவருக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
#PalaniTemple #LandScam #MaduraiCentralPrison #CBCID #Anwardeen #SubRegistrarJustin #TamilNaduNews #Madurai #Dindigul #Palani #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNNewsUpdates