தீவுப் பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முன்னேற்றத்தை எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக நேரில் பார்வையிட்டார்.
நெடுந்தீவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு நிறுவப்பட்டு வரும் சூரிய மின்சக்தி (Solar Power) அமைப்பையும் ஆய்வு செய்து, திட்டத்தின் நிலைமை குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
எதிர்காலத்தில் நெடுந்தீவு பகுதியில் காற்றாலை மின் திட்டமும் நிறுவப்படவுள்ளது.
நீண்ட காலமாக இந்தத் தீவுகள் டீசல் அடிப்படையிலான மின்சார உற்பத்தியை சார்ந்திருந்தன. கடல் வழியாக எரிபொருளை கொண்டு செல்வதில் உள்ள சவால்கள் மற்றும் அதிக செலவுகள் காரணமாக, குறிப்பாக மோசமான வானிலை மற்றும் இயற்கை அனர்த்த காலங்களில், மின்சார விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையை மாற்றுவதற்காக இந்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் 1.7 மெகாவாட் சூரிய மின் நிலையம், 750 கிலோவாட் காற்றாலை மின் நிலையம் மற்றும் 2.4 மெகாவாட்-மணி மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) ஆகியவை அடங்கும்.


மேலும், மேம்பட்ட ஆற்றல் மேலாண்மை அமைப்பு (EMS) மூலம் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் சமநிலைப்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் புதைபடிவ எரிபொருட்களின் சார்பை குறைத்து, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தையும் குறைக்கும் முக்கியமான முயற்சியாகும். இதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் வலுப்பெறும் என அமைச்சர் தோழர் தெரிவித்தார்.
24 மணி நேர மின்சார வசதி கிடைப்பதன் மூலம் தீவுப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றும், மீன்பிடி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் விரிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளும் மேம்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
திட்டத்தின் மீதமுள்ள கட்டுமானப் பணிகளை விரைவாக நிறைவு செய்து, மக்களுக்கு விரைவில் அதன் முழுப் பயனை வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுப் பயணத்தில் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரிகளும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்