நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும் வகையில் மீண்டும் தலைதூக்க முனையும் பிரிவினைவாதக் கருத்தியல்களையும் அதற்குத் தூண்டுதல் அளிக்கும் சக்திகளையும் தோற்கடிப்பதற்கு, இனம், மதம், கட்சி பேதங்களைக் கடந்து ஒட்டுமொத்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் அமைப்பின் அழைப்பாளர் பந்துல அத்துகோரல அழைப்பு விடுத்துள்ளார்.
இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் அமைப்பின் காரியாலயத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களாக இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அல்லது பிரிவினைவாதக் கருத்தியலுக்கு தூண்டுதல் அளிக்கும் வகையிலான சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையினாலேயே நாம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட்டியுள்ளோம். இது தொடர்பாக, ஓய்வுபெற்ற மற்றும் சேவையை நிறைவு செய்த இராணுவ வீரர்களின் சங்கம் என்ற ரீதியில் எமது நிலைப்பாட்டை வெளியிடுவதே இதன் நோக்கமாகும்.
ஜூன் 11ஆம் திகதி நடைபெற்ற அந்தச் சோகமான சம்பவத்தை நாம் மிகுந்த மனவேதனையுடன் நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல், 1987 ஜூன் மாதம் 4ஆம் திகதி இந்திய அரசாங்கத்தினால் எமது வான் பரப்பு வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது.
முப்பது ஆண்டுகால மோதலுக்குள் சர்வதேச தலையீடுகள் எமது நாட்டுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அத்தகைய கொடூரமான அமைப்பைத்தான் 2009 மே 18 அன்று நந்திக்கடல் களப்பில் வைத்து எமது இராணுவ வீரர்கள் முழுமையாகத் தோற்கடித்தனர்.
இந்த யுத்தத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படைகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை உட்பட அனைவரும் உண்மையான இராணுவ வீரர்கள் ஆகும்.
இந்தியப் பிரதமர் ஒருவரையே படுகொலை செய்யும் அளவுக்குப் பலம் வாய்ந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை இலங்கையின் ஆயுதப் படைகளே முடிவுக்குக் கொண்டு வந்தன.
ஆனால், கடந்த சில நாட்களாக நாம் பல்வேறு விடயங்களைக் காண்கிறோம். இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் என்ற ரீதியில் எமது அமைப்பு பிரிவினைவாதத்தை முற்றாக எதிர்க்கிறது. அன்று போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டு, இரண்டாகப் பிரியவிருந்த நாட்டை, எமது அரசியலமைப்பை பாதுகாக்க முப்படைகளாலும் அரசியல் அதிகாரத்தினாலும் முடிந்தது.
அவ்வாறு பாதுகாக்கப்பட்ட நாடு மற்றும் அரசியலமைப்பு என்பவற்றின் காரணமாகவே, இன்று தமிழ் புலம்பெயர் சமூகத்தினரதும் பிரிவினைவாதக் குழுக்களினதும் பிரதான இலக்காக இந்த இராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து எமது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தோற்கடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிற்குச் சென்று, ஏற்படவிருக்கும் இந்த ஆபத்து குறித்து அவர்களை விழிப்புணர்வூட்டும் பணிகளிலும் ஈடுபடுவோம்.