இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாசனம் அழியும் தருணத்தில் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொமும்பில் சனிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாரிய அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது. அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வந்தவர்கள் இன்று நாட்டு மக்களின் பசியையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் கவனத்தில் கொள்ளாது இருக்கின்றனர்.
டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் சாமானிய மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, வறுமையில் வாடும் மக்கள் ஒரு வேளை உணவை உட்கொள்வதற்கோ அல்லது பிள்ளைகளுக்கு ஒரு கோப்பை பால் கொடுப்பதற்கோ பெரும் சிரமப்படுகின்றனர். இவ்வாறான சூழலில், தற்போதைய ஆட்சியாளர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் செயற்படும் சில குழுக்கள் மகா சங்கத்தினரையும் பௌத்த சாசனத்தையும் திட்டமிட்டு அழிக்க முனைந்துள்ளன. இந்த ஆபத்தான போக்கை தடுத்து நிறுத்துவதற்கு மகா சங்கத்தினர் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய காலம் கனிந்துவிட்டது.
வெறும் தானம் பெற்றுக்கொள்வதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாது, சாசனம் அழியும் தருணத்தில் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, இந்த ஆபத்தான அரசியல் போக்குகளைத் தடுக்க மகா சங்கத்தினர் முன்வர வேண்டும்.
கடந்த தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்துவதற்குச் செயற்பட்டவர்கள், தற்போது அந்த அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறியமை குறித்து வெட்கப்பட வேண்டும். வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
மக்கள் பசியால் வாடும் நிலையில், அரசாங்கம் இவ்வாறான அசமந்தப் போக்குடன் இருப்பது கண்டிக்கத்தக்கது. தற்போதைய அரசு மக்களின் சுமையை உணராமல், தாங்கள் பெற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவே முயற்சிக்கிறது
எனவே, இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும், இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் டிராக்டர் சின்னத்துக்கு அதிகாரத்தை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். எமது நாட்டை அழிவில் இருந்து மீட்கவும், தற்போதைய அரசாங்கத்தின் பிடியில் இருந்து நாட்டைப் பாதுகாக்கவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.