மிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.
இருப்பினும் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதனையடுத்து கடந்த 18 ஆம் திகதி தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்து செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்’ என அதில் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் எந்தவொரு விடயத்திலும் இரகசியத்தன்மை பேணப்படவேண்டிய அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே தமிழ்த்தேசியப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டு நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையிடம் அறிவித்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருவதாக அறியமுடிகிறது.