முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, “மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்” என்று இப்போது நமக்குத் தேவையான கவிதையை எப்பொழுதோ எழுதிவிட்டார் மகாகவி பாரதியார். இதே கவிதையில்தான், “மண் பயனுற வேண்டும்” என்றும் பாரதியார் சொல்லியிருப்பார். மண்ணும், மக்களும், மாநிலமும் பயன்பெறத் தேவையான கனவுகளை உருவாக்க வேண்டும் என்றுதான் உங்களை நான் அழைத்திருக்கிறேன்.
உங்கள் ஒவ்வொருவரையும் தனி மனிதர்களாக நான் பார்க்கவில்லை. உங்கள் எல்லோரையும் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக பார்க்கிறேன்! அந்த பெரும் நம்பிக்கையுடன்தான் உங்களுக்கு அழைப்பு விடுத்து வரவைத்திருக்கிறோம். எங்களின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இன்றைய நிகழ்ச்சி போல என்றைக்கும் நடந்திருக்காது. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமல்ல, எதிர்கால தமிழ்நாட்டையும் மனதில் வைத்து, இந்த “தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறோம்!
கடந்த ஐந்தாண்டுகளில், நம்முடைய திராவிட மாடல் அரசு, ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆற்றிய மகத்தான பணிகளை, அளப்பரிய சாதனைகளை சுருக்கமாக, ஆனால், மிகத்தெளிவாக, இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து நம்முடைய அமைச்சர்கள் சிலர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நேரத்தின் நெருக்கடி காரணமாக, அவர்கள் சுருக்கமாக பேசினார்கள். இன்னும் சில அமைச்சர்களும் பேசுவதற்கு நேரம் இடம் கொடுக்கவில்லை. நாம் அவ்வளவு காரியங்களை நிறைய செய்திருக்கிறோம்! எல்லாவற்றையும் இந்த நிகழ்ச்சியில் சொல்ல முடியாத அளவுக்கு மலையளவு சாதனைகளை வைத்திருக்கிறோம்!
ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் – துறையின் அதிகாரிகள், கடைநிலை அரசு ஊழியர்கள் வரை அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, அதன் பயன்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காட்டி வரும் அர்ப்பணிப்பு உணர்வும் – அயராத உழைப்பும் – நிர்வாகத்திறனும் – தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி உயர்த்தியிருக்கிறது
கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சிதான், நான் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம்! சொன்னதை மட்டுமல்ல. சொல்லாத பல முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம்! ஆட்சிக்கு வரும்போது, இவ்வளவு திட்டங்களை நம்மால் நிறைவேற்ற முடியுமா? என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனாலும், அத்தனைத் திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்ற கனவும் எனக்கு இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளுக்கான என்னுடைய கனவுகளில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது என்று இந்த நிகழ்ச்சி மூலமாக அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.