சென்னை
டாஸ்மாக் டெண்டர் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்கும்படி காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு பின்னணி:
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, மதுக்கூடங்களுக்கு (பார்) உரிமம் வழங்கியது மற்றும் குடோன்களில் இருந்து மதுபானங்களைக் கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாமீன் மனு மீது காரசார வாதம்:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள கார்த்திக் என்பவர், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவானது நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் (கார்த்திக்) தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குதிரை பேர வழக்கில் கார்த்திக் ஜாமீன் பெற்று விடுதலையான அதே நாளில்தான், அவர் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த டாஸ்மாக் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்,” எனச் சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.
நீதிபதி உத்தரவு:
இதனைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், கார்த்திக்கின் ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்கக் கால அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி லட்சுமி நாராயணன், இந்த ஜாமீன் மனு குறித்துக் காவல்துறை விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
#TASMACScam #SenthilBalaji #MadrasHighCourt #DVAC #TNPolice #TasmacCase #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates