டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’ (TRCA) நகருக்கான வெள்ள எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வானிலை மாற்றம் திங்கட்கிழமை இரவு தொடங்கி, இரவு முழுதும் நீடித்து அதிகாலை நேரம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொராண்டோவில் இன்று பிற்பகல் 40 சதவீத மழைக்கான வாய்ப்பும் இடியுடன் கூடிய மழைக்கான அபாயமும் உள்ளதாக கனடா சுற்றாடல் திணைக்களம் (Environment Canada) தெரிவித்துள்ளது. நகரில் இன்று இரவு மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 70 சதவீதமாக உயர்கிறது. செவ்வாய்க்கிழமை 60 சதவீத மழை வாய்ப்பும் இடியுடன் கூடிய மழை அபாயமும் உள்ளது.
“எதிர்பார்க்கப்படும் இடியுடன் கூடிய மழையானது, சில நேரங்களில் அதிக தீவிரத்துடன், ஒரு மணி நேரத்தில் 20 மி.மீ க்கும் அதிகமாகவும், ஒட்டுமொத்தமாக 50 மி.மீ வரையிலும் மழையைக் கொண்டுவரக்கூடும்” என்று பாதுகாப்பு அதிகாரசபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வெள்ள எச்சரிக்கை முன்னறிவிப்புகள் (Flood outlooks) என்பது, அதிக நீர் வழிந்தோடல், பனிக்கட்டி அடைப்புகள் அல்லது ஏரிக்கரை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடிய வானிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஒரு முன் எச்சரிக்கையாகும்.
இந்த எச்சரிக்கை நாளை இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும்.
ஆறுகள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள் மற்றும் அருகிலுள்ள நடைபாதைகளைத் தவிர்ப்பதன் மூலம் நீர்நிலைகளுக்கு அருகில் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை எச்சரிக்கின்றனர். மேலும், வேகமாக ஓடும் நீர்நிலைகள் மற்றும் வழுக்கக்கூடிய ஆற்றங்கரைகளில் இருந்து குழந்தைகளையும் செல்லப் பிராணிகளையும் விலக்கி வைக்குமாறும், சூழ்நிலை சீராகும் வரை நீர் சார்ந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணங்களுக்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும், வெள்ள நீரைக் கடந்து வாகனம் ஓட்டவோ, நடக்கவோ அல்லது மிதிவண்டி ஓட்டவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் வெள்ள நீர் பார்ப்பதை விட ஆழமாகவும் வேகமாகவும் இருக்கலாம். தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகள் அல்லது மழைநீர் வடிகால்களுக்கு அருகில் நீர் தேங்குவதைக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து மாற்றுப் பாதை மற்றும் சாலை மூடல் வழிகாட்டிப் பலகைகளையும் பின்பற்ற வேண்டும் என்று TRCA கூறுகிறது.
கனடா சுற்றாடல் திணைக்களத்தின் உள்ளூர் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பொது எச்சரிக்கைகளைப் பின்தொடர்வதன் மூலம் விழிப்புடன் இருக்குமாறும், குறிப்பாக இணைய வசதி இல்லாத அண்டை வீட்டாருடன் வெள்ள பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
இறுதியாக, நகராட்சிகள் மற்றும் அவசர சேவைகள் தங்களது வெள்ளத் தயார்நிலை நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மாறிவரும் சூழ்நிலைகளைக் கண்காணிக்குமாறும் TRCA ஊக்குவிக்கிறது.
நீர்நிலைகளில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அறிவிக்க, TRCA இன் வெள்ள உதவி எண் 416-661-6514 இல் செய்தி அனுப்பவும் அல்லது ஆபத்தில் இருந்தால் உடனடியாக 911 ஐ அழைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.