சிவனொளிபாதமலைக்குத் தரிசனம் செய்ய வந்த யாத்திரிகர் ஒருவர், மலை ஏறும் வழியில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று(29.03.2026) முற்பகல் 11:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது உறவினர்களுடன் சிவனொளிபாதமலைக்குத் தரிசனம் செய்ய வந்த இவர், கங்குலதென்ன பகுதியில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸாரின் உதவியுடன் அவர் உடனடியாக நல்லதண்ணி நகருக்குத் தூக்கி வரப்பட்டுள்ளார்.
அங்கிருந்து உடனடியாக அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.