சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களும் அதிகாரிகளின் படுகொலைகளும் அரசாங்கத்தின் புலனாய்வுப்பிரிவின் பலவீனம் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது. இதற்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
எனினும், உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பெற்றோர்களின் வேதனையைப் பயன்படுத்தி இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை அரசியல்மயமாக்கவோ அல்லது அரசியல் இலாபம் தேடவோ தான் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒபேசேகரபுர பிரதேசத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற விளம்பரத்திற்காக இளைஞர்களைக் காரணம் ஏதுமின்றி சிறைகளில் அடைத்து வருகிறது. சிறையிலுள்ளவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களுக்குச் சிறைத்தண்டனைக்கு பதிலாக முறையான புனர்வாழ்வே அளிக்கப்பட வேண்டும். 11,000 பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறைகளில் 45,000 பேரை அடைத்து வைத்துள்ளதோடு, 3,000 கைதிகளைக் கண்காணிப்பதற்கு வெறும் 180 அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புப் பலவீனமடைந்துள்ளது.
பின்தங்கிய சூழ்நிலையையும் சமூக நெருக்கடியையும் பயன்படுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அதே போன்றதொரு சமூக அனர்த்தத்தையும் மக்கள் மீதான அழுத்தங்களையும் இவர்கள் மீண்டும் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.