நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய போதைப்பொருள் குற்றவாளிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
திருகோணமலையில்இன்று புதன்கிழமை (25) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்தச் சுற்றிவளைப்புகள் தொடர்பான மேலதிக விபரங்களையும் வெளியிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் பதுங்கியிருந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று விசேட நடவடிக்கைகள் மூலம் அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தோனேசியாவிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட கரையோர பகுதிகள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக படகுகள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குப் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும், முன்னைய அரசாங்கங்கள் இந்த விநியோகச் சங்கிலியை முறியடிக்கத் தவறிய நிலையில், தற்போதைய அரசாங்கம் உயர்மட்டக் கடத்தல்காரர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.