எரிபொருள் விலை உயர்வால், ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும், தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாயிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறிய முட்டையின் விலை 37 ரூபாயாகவும், நடுத்தர முட்டையின் விலை 39 ரூபாயாகவும் பெரிய (சிவப்பு) முட்டையின் விலை 41 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு ஆகியவை கோழி வளர்ப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக பாதித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர தெரிவித்தார்.
கோழிப் பண்ணைகளில் இளம் கோழிக் குஞ்சுகளை வெப்ப நிலையில் வைத்திருக்க எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் எரிபொருள் விலை உயர்வு கோழி வளர்ப்புத் தொழிலை வழக்கத்திற்கு மாறாகப் பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோழிப் பண்ணைகளில் இருந்து தோலுடன் கூடிய கோழி இறைச்சி சந்தைக்கு வெளியிடப்படுகிறது.
தற்போது, ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 1,200 முதல் 1,250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நாளாந்தம் சுமார் 700 மெட்ரிக் டன் தோலுடன் கூடிய கோழி இறைச்சி சந்தைக்கு வெளியிடப்படுகிறது. ஒரு மாதத்திற்கான கோழி இறைச்சியின் தேவை 22,000 மெட்ரிக் டன்கள் ஆகும்.
டீசல் விலை உயர்வால் கடலுக்குச் செல்லும் படகுகளின் எண்ணிக்கை குறைதல், சந்தையில் கிடைக்கும் மீன்களின் அளவு குறைதல், பன்றி இறைச்சி உற்பத்தி குறைதல், ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை 2,800 ரூபாயாக உயர்தல், மற்றும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சியின் விலை 3,500 ரூபாயை தாண்டுதல் போன்ற காரணங்களால் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கோழி இறைச்சி இலாபகரமானதாக உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.