இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிளிநொச்சி – பூநகரி இரணை தீவிற்கு அன்மித்த கடல் பகுதியில் கடந்த (12.03.2026) அதிகாலை சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களையும் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்திய மீன்பிடி படகினையும் கடற்படையினர் கைது செய்து ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
குறித்த இரு இந்திய கடற்றொழிலாளர்களையும் கடந்த 12ஆம் திகதி இரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
குறித்த இரு இந்திய கடற்றொழிலாளர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தியமை சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டமை உள்ளிட்ட நான்கு குற்றச் சாட்டுக்களுக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா நான்கு மாத கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.