கனடாவின் ஒட்டாவா (Ottawa) பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு சிறு பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ள அதிர்ச்சி உட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஒட்டாவா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒட்டாவாவின் ஃபின்ட்லி கிரீக் (Findlay Creek) பகுதியில் உள்ள மாண்டேவில்லா கிரசண்டில் (Mandevilla Crescent) அமைந்துள்ள வீடொன்றில் வசிப்பவர்களின் நலம் குறித்து விசாரிப்பதற்காக (Wellness check) திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். இதன்போது, அந்த வீட்டிற்குள் 7 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர்கள் இருவரும் அவர்களது தந்தையின் வீட்டிற்குள்ளேயே சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், கெம்ப்ட்வில் (Kemptville) பகுதிக்கு அருகிலுள்ள 416 ஆம் இலக்க நெடுஞ்சாலையோர வாகன நிறுத்துமிடம் ஒன்றில், எரியூட்டப்பட்ட வாகனத்திற்குள் இருந்து அந்தத் தந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், இக்குற்றச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரோகுவாரிஸ் (Iroquois) பகுதியில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்தும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். எனினும், அந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த சம்பவமும் மிகவும் சிக்கலானது என விவரித்துள்ள அதிகாரிகள், தற்போதைய நிலையில் பொதுமக்களுக்கு வேறு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏதேனும் விபரங்கள் தெரிந்தவர்கள் 613-236-1222 (ext. 5943) என்ற இலக்கத்தின் ஊடாக ஒட்டாவா பொலிஸ் கொலைக் குற்றப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்