மட்டக்களப்பு மாவட்டத்தில், கடற்படையினரால் மீனவரான தனது கணவர் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே தாம் மட்டக்களப்பு உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (18) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில், பாதிக்கப்பட்ட மீனவரும் அவரது மனைவியும் இதனை தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 05ஆம் திகதி செட்டிபாளையம் கடற்கரை பகுதியில், கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர், “சுருக்கு வலை” பயன்படுத்தி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, மீனவரை கைது செய்துள்ளனர்.
அப்போது, அவரை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முழங்காலில் நிறுத்தி தாக்கியதாகவும், பொதுமக்கள் முன்னிலையில் சித்திரவதை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர், அவரை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று, அதன் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மீனவர் உடல்நிலை குறைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தாக்குதல் இடம்பெற்றதற்கான மருத்துவச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும், விசாரணைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
10, 14 மற்றும் 17ஆம் திகதிகளில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதும், சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரி பல்வேறு காரணங்களால் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொலிஸார் மீது நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், நீதியை பெறுவதற்காக மேலதிக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் அளிக்கப்பட்ட முறையீட்டின் போது, “சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.