ஒட்டாவா – கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் துருக்கியில் (Türkiye) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று, ஒட்டாவாவின் ‘லிட்டில் இட்டாலி’ (Little Italy) பகுதியில் உள்ள ஷாம்பெயின் அவென்யூ சவுத் வீதியில் 33 வயதான ஜாமா ரோபிள் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக 31 வயதான ஜிப்ரீல் பகால் (Gibriil Bakal) என்பவரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்தனர்.
கைரேகை சோதனையில் சிக்கிய சந்தேகநபர்
துருக்கிய எல்லை அதிகாரிகள் நடத்திய பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேன் (Biometric fingerprint scan) சோதனையின் போது, சர்வதேச காவல்துறையான இன்டர்போலால் (Interpol) அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த ‘ரெட் நோட்டீஸ்’ (Red Notice) எச்சரிக்கையுடன் அவரது கைரேகை ஒத்துப்போனதை அடுத்து, ஜிப்ரீல் பகால் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்தத் தேடுதல் வேட்டைக்கு உதவிய சர்வதேச சட்ட அமலாக்கக் கூட்டாளிகள் மற்றும் கனடாவின் தேடப்படும் குற்றவாளிகளைப் பட்டியலிடும் ‘போலோ திட்டத்திற்கு’ (BOLO Program) ஒட்டாவா புலனாய்வாளர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படும் போது, இத்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் கனடாவின் மிக முக்கியமான தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பகால் 19ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஜிப்ரீல் பகால் சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.