இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் தொடக்கத்தில், மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் முன்னுரிமைத் தேவைகளை ஆளுநர் விளக்கினார். பொருளாதார மேம்பாடு, காணிப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், மற்றும் நெகிழ்வுத்திறன் கொண்ட வாழ்வாதாரங்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகளின் அடிப்படையில் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
காணிப் பிரச்சினைகளைத் தனிப்படுத்திக் காட்டிய ஆளுநர், கடந்த காலப் போரினால் பலருடைய காணி ஆவணங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதைச் சுட்டிக்காட்டினார். தற்போது மக்களிடமோ அல்லது அரசுத் திணைக்களங்களிலோ முறையான பதிவுகள் இல்லை.
இதன் விளைவாக, மக்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கான தீர்வுகளைத் தேடி மக்கள் பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்திற்கு பெருமளவில் வருகை தருகின்றனர். எனவே, காணி பிணக்குகளை விரைவாகத் தீர்ப்பதும், முறையான காணி ஆவணங்களை வழங்குவதும் எமது மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே ‘ஹிமிகம்’ (உரிமங்கள்) திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை ஊக்குவித்தல்.
நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ‘ஒற்றைச் சாளர முறையை’ (Single-window system) நிறுவுதல்.
காணிகளை விடுவிப்பதற்கும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல்.
பசுமை காலநிலை நிதி (Green Climate Fund) போன்ற சர்வதேச நிதிகளுக்கான அணுகலைப் பெறுதல்.
வட மாகாணத்தின் தனித்துவமான சவால்களைத் திறம்பட கையாண்டு வரும் ஆளுநரை ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டினார். அண்மைய வெள்ள அனர்த்தத்தின் போது கிராம நிலதாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், ஐநா முகவர் நிறுவனங்களான யுனிசெஃப் (UNICEF) போன்றவை பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு, குறிப்பாகத் தனித்து வாழும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலையகத் தமிழ் சமூகத்தினருக்கு விரைவான உதவிகளை வழங்கியதைக் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசிய அவர், இலங்கை போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கும் நேரடி நிதி உதவி குறைந்துள்ள யதார்த்தத்தை விளக்கினார். இருப்பினும், பசுமை காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி (Loss and Damage Fund), கடன் பரிமாற்றங்கள் (Debt swaps) மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய மேம்பாட்டுப் பத்திரங்கள் மூலம் வட மாகாணத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்க ஐநா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். “கொழும்பில் வட மாகாணத்திற்கான ஒரு தூதுவரைப் போலவே ஐநா உணர்கிறது” என்று குறிப்பிட்ட அவர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கத் தொடர்ந்து பாடுபடுவதாக உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், வனப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் சார்ந்த காணிப் பிரச்சினைகளை விளக்கினர். கிளிநொச்சி மேலதிக மாவட்ட செயலாளர் தனது மாவட்டத்தில் உள்ள காணி பிணக்குகள் குறித்துத் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, வட மாகாண காணி ஆணையாளர் பேசுகையில், மாகாணத்தில் சுமார் 200,000 காணி ஆவணங்கள் தயார் செய்யப்பட வேண்டியுள்ளதாகக் கூறினார். குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு இதனை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிப்பது கடினம் என்பதால், இதில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநரின் செயலாளர், நிர்வாகத்திற்கான பிரதிப் பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.