அமெரிக்க – இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு 30 நாள் தடையில்லா விலக்கினை ட்ரம்ப் நிர்வாகம் நேற்று (20) வழங்கியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்கா இவ்வாறு தடைகளைத் தற்காலிகமாக நீக்குவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்த நிலையில், மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் பொதுவான உரிமத்தை நேற்று வெளியிட்டது. இது தொடர்பான உரிமம் திறைசேரி திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
“தற்போது கையிருப்பில் உள்ள இந்த விநியோகத்தை உலகிற்கு தற்காலிகமாக திறந்துவிடுவதன் மூலம், அமெரிக்கா சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலகளாவிய சந்தைகளுக்கு விரைவாகக் கொண்டு வரும். இது உலகளாவிய எரிசக்தி அளவை விரிவுபடுத்துவதுடன், ஈரானால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக அழுத்தங்களைக் குறைக்க உதவும்,” என்று பெசென்ட் தனது X தள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.