இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோருக்கிடையிலான தீர்க்கமான உயர்மட்டச் சந்திப்பு டோக்கியோவில் உள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் “சுதந்திரமான மற்றும் திறந்தநிலை” என்ற கொள்கையின் கீழ், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான ஒத்துழைப்பு மிக அவசியமானது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜயசேகர, இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் முக்கிய புவியியல் அமைவிடம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் அதன் வகிபாகத்தைச் சுட்டிக்காட்டினார்.
ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படையின் கப்பல் அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்தமை மற்றும் இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகள் குறித்து இதன்போது பாராட்டப்பட்டது. எதிர்காலத்தில் கூட்டு கடற்படைப் பயிற்சிகள் மற்றும் பணியாளர் பரிமாற்றங்களை விரிவுபடுத்த இருதரப்பும் உடன்பட்டன.
இலங்கை கடலோர பாதுகாப்புப் படைக்கு கப்பல்களை வழங்கியமை மற்றும் வானிலை ஆய்வுத் துறைக்காகப் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான ‘டொப்ளர் ரேடார்’ அமைப்பை நிறுவியமை போன்ற ஜப்பானின் பாரிய பங்களிப்புகளுக்கு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியின் போது ஜப்பான் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் அவர் நினைவு கூர்ந்தார். சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மதித்து, இலங்கையின் அணிசேரா நடுநிலை மற்றும் பக்கச்சார்பற்ற வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ஜப்பானுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதாக பிரதி அமைச்சர் இதன்போது மீள உறுதிப்படுத்தினார்.
மேலும், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஜப்பான் தேசிய பாதுகாப்பு கலாசாலை ஊடாக இலங்கையர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் குறித்தும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.