நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உயர்தரப் பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மையமும் இணைந்து 5ஆம் திகதி கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
அதில் இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திட்டமிடப்படும். பொதுவாக ஓகஸ்ட் மாதம் குறைந்த மழைப்பொழிவு காணப்படும் காலமாகும்.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இது தற்காலிகமான நிலைமை. 6, 7, 8 ஆகிய தினங்களுக்குப் பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரீட்சைகள் 10ஆம் திகதிக்குப் பிறகே ஆரம்பமாக இருப்பதால், அதற்குள் இந்த பாதிப்பு பெருமளவில் குறைந்திருக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஓகஸ்ட் 6ஆம் திகதிக்குப் பின்னர், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி அமைப்பின் தாக்கத்தால், இலங்கையில் மீண்டும் மழைப்பொழிவு ஓரளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டி – பாலந்தொட்ட பகுதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, வெள்ளநீரில் சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் சேற்றுடன் கூடிய வெள்ள நீர் திடீரென உயர்ந்து பேருந்தைச் சூழ்ந்து கொண்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு லொறி ஒன்றின் உதவியுடன் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டுப் பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். பேருந்தைச் சுற்றி வெள்ள நீர் அதிகளவில் சூழ்ந்திருந்ததால், பயணிகள் ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மோசமடைந்து வரும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், நாவலப்பிட்டி இளைஞர்களின் இந்த விரைவான செயல்பாடும் துணிச்சலும் ஒரு பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.