சென்னை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூட்டாக எழுதியுள்ள மிகக் கடுமையான விமர்சனங்கள் அடங்கிய கடிதம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடிதத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள்:
-
கூட்டணித் தவறுகளும் தொடர் தோல்விகளும்: 2021-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா நேரில் வலியுறுத்தியும் டிடிவி தினகரனை ஏற்க மறுத்ததால் 42 தொகுதிகளில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 2024-ல் பாஜக, பாமக கூட்டணிகளைத் தன்னிச்சையாக நிராகரித்ததால் திமுக கூட்டணி 40 இடங்களை வென்றது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை வெளியேற்றியதோடு, தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைக்கும் பொன்னான வாய்ப்பையும் நீங்கள் கோட்டைவிட்டீர்கள்.
-
கோடிக்கணக்கில் பண இழப்பு: உங்களின் முன்யோசனையற்ற தன்னிச்சையான முடிவுகளால் நாடாளுமன்றத் தேர்தலில் பல அதிமுக வேட்பாளர்கள் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாயை இழந்து இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர்.
-
திமுகவுடன் பேரம் & எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி: 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க நீங்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் 47 எம்.எல்.ஏ-க்களில் 25 பேர், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா வழியில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
-
சர்வாதிகாரப் போக்கு & 400 பேர் நீக்கம்: பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் உங்களுக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கக் கூடாது என்ற சர்வாதிகார எண்ணத்தில், கட்சியின் வெற்றிக்காகக் காலம் காலமாக உழைத்த 400-க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகளை விதிகளுக்கு முரணாக நீக்கியுள்ளீர்கள். கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய நிர்வாகிகளை நீக்கிவிட்டுப் புதியவர்களை நியமித்துக் கட்சியைப் பலவீனப்படுத்தி வருகிறீர்கள்.
-
சசிகலா, டிடிவியை மீண்டும் இணைக்க கோரிக்கை: உங்களை முதலமைச்சராக்கிய சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும், அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துப் பலப்படுத்த வேண்டும்.
-
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: இன்னும் 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், மே 13-க்குப் பிறகு நீக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற பெருந்தன்மையான அடிப்படையில் மீண்டும் அதே பதவிகளில் அமர்த்தி, கட்சியைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்தப் பகிரங்கக் கடிதத்தில் மிகக் காட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவரது தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களே போர்க்கொடி தூக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#EPS #AIADMK #SPVelumani #NathamViswanathan #EdappadiPalaniswami #Sasikala #TTVDhinakaran #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #AIADMKSplit #TNNewsUpdates