இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து சுகாதார அமைச்சுக்குக் கட்டடமொன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதன் பின்னர், அதற்கான வாடகைப் பணத்தைக் காசோலைகள் மூலம் செலுத்துவதில் எவ்வித தாமதமும் இன்றிச் செயற்படுவதற்காகவே சந்தேகநபர் இவ்வாறு இலஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான உதவியை வழங்குவதற்கும், அவரது குடும்ப உறவினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உதவியை வழங்குவதற்கும் குறித்த வர்த்தகர் இவ்வாறு இலஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபரும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.