நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகியுள்ளது.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக கடந்த 2025 செப்டம்பரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தினால் அப்போதைய பிரதமர்
கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும்.
இந்த தேர்தலில் சுமார் 1.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, இந்தத் தேர்தலை நடத்தி வருகிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதேவேளை வாக்கு எண்ணிக்கை இன்று இரவே தொடங்கப்பட்டு, வார இறுதியில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.