அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும்போது வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, 2027 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டமைக்கப்பட்ட புள்ளிகள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரச காணியில் 8 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் தரப்பினர், அதேபோல் 01 முதல் 06 வருடங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தர வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் மின்சாரம், நீர் அல்லது வரி ஆவணங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 4 புள்ளிகள் வரை கிடைக்கும் வகையில் புதிய முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமர்வின்போது பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் எதிர்கொள்ளும் மன ரீதியான, சுகாதார மற்றும் சமூகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, டிஜிட்டல் வெளியில் அவர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கையொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் கல்வி,சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இதன் முன்னேற்றமாக, சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய வழிகாட்டல் கோவை ஒன்றைத் தயாரிப்பதற்கும், மூளை ஆரோக்கியம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் தேசிய மட்டத்திலான கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இணையவழியூடான வன்முறைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக, மாகாண மற்றும் சிறுவர் நன்னடத்தை சேவைகள் திணைக்களம் ‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்துடன் இணைந்து திட்டமொன்றைத் தயாரித்துள்ளதுடன், அதற்காக சார்க் அபிவிருத்தி நிதியத்தின் நிதி அனுசரணையப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று, யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்புடன் ஆசிரியர்களுக்கான டிஜிட்டல் திறன் கட்டமைப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு தொகுதி மூலம் சுமார் 750 பயிற்றுவிப்பாளர்கள் ஏற்கனவே பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 106 தொலைதூரக் கற்றல் நிலையங்கள் ஊடாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்நிலை பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல் கோவையை 2026 செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்குத் தயாராக உள்ளது. பிள்ளைகள் கைபேசிகளுக்கு அடிமையாவதில் இருந்து அவர்களை மீட்பதற்கான குடும்ப வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துமிந்த குருகே தார்மீக ரீதியாக தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி வருகின்றார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்குள், சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அமைச்சரவைத் தீர்மானங்களுக்கு அமைவாக பல நிறுவனங்களின் பங்களிப்புடன் பன்முகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளது. இப்பொறிமுறையின் கீழ், வாழ்வுக்குக் கைகொடுக்கும் திட்டத்தின் மூலம் அநாதரவான சிறுவர்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு தலா 2 மில்லியன் ரூபா வீதம் வழங்கப்படுவதுடன், ‘அர்த்த’ திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த அநாதைச் சிறுவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.
மேலும், பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத சிறுவர்களுக்கு அவற்றை வழங்குதல்இ பாடசாலை நேரத்தின் பின்னர் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகும் சிறுவர்களுக்காக ரத்மலானை பிரதேசத்தை மையமாகக் கொண்டு ‘செனெஹச’ என்ற பெயரில் முன்னோடித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல், உடல் ரீதியான தண்டனைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் 2025-2029 தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிறுவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் சாட்சியமளிக்கக் கூடிய வகையில், வீடியோ சாட்சியங்களை பதிவு செய்யும் இரண்டு நிலையங்கள் கராப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் போது வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, 2027 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டமைக்கப்பட்ட புள்ளிகள் அடங்கிய சுற்றறிக்கொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரசாங்க காணியில் 08 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் தரப்பினர், அதேபோல் 01 முதல் 06 வருடங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தர வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் மின்சாரம், நீர் அல்லது வரி ஆவணங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 04 புள்ளிகள் வரை கிடைக்கும் வகையில் புதிய முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது.
சில பாடசாலைகளில் காத்திருப்புப் பட்டியலுக்கு புறம்பாக மாணவர்கள் சேர்க்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் என்ற வரம்பிற்குள் தற்காலிக காத்திருப்புப் பட்டியல்களைத் தயாரிக்குமாறு புதிய சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. விசேட சந்தர்ப்பங்களில், தேசிய அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர்களின் பூர்வாங்க அனுமதியின் பேரில் மட்டுமே அதனை 100 சதவீதம் வரை திருத்த முடியும். மேலும், கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வகுப்பறையொன்றில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் அதற்குரிய கொள்கை ரீதியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.