மத்திய கிழக்கு யுத்தத்தின்போது அரசாங்கம் மத்திய நிலையில் இருந்தாலும் உறுதியான வெளிநாட்டுக்கொள்கையில் இருக்கவேண்டும். என்றாலும் இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நானாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமெரிக்கா, ஈரான் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்று, சமாதானம் ஏற்படுவதற்கு இருக்கும் நிலையிலே இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஓமான வெளிவிவகார அமைச்சர் இருந்துள்ளார். அவர் இந்த சமாதானம் தொடர்பில் உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்கு தயாராகி வரும்போதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதனால் இந்த தாக்குதலை ஆரம்பித்தவர்கள் யார் என்பது தெளிவாகிறது.
இந்த யுத்தத்தின்போது அரசாங்கம் நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் உண்மையில் அரசாங்கம் நடுநிலையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருப்பது தொடர்பில் எதிர்க்கட்சியாகிய நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் இந்த நிலைமையில் நாங்கள் எடுக்கும் நிலைப்பாடு மிகவும் முக்கியமாகும்.
சுதந்திரத்திற்கு பின்னர் எமது தலைவர்கள் வெளிநாட்டு கொள்கை அடிப்படையில் எமது நாட்டை கெளரவமான ஒரு நிலைக்கு கொண்டுவந்த முறை தொடர்பில் பல உதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இரண்டாம் மகா யுத்தத்தின்போது ஜேஆர் ஜயவர்த்தன ஐக்கிய நாடுகள் மாநாட்டின்போது, தர்ம போதனை வாக்கியம் ஒன்றை சுட்டிக்காட்டி ஆற்றிய உரை எமது மிகவும் முன்மாதிரியாகும். அதேபோன்று சிறிமா அம்மையார், இந்திய சமுத்திர வலயம் சமாதான வலயமாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்காெண்ட பிரேரணை எமக்கு மேற்கொண்ட பாரிய சக்தியாகும். இதுவும் எங்களுக்கு சிறந்த முன்மாதிரியாகும். அதேபோன்று இந்திய சீனா மோதலின்போதும் சிறிமா அம்மையார் இலங்கையை அதில் தலையிடச்செய்து இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார். இது வெளிநாட்டு கொள்கையில் உயர்ந்த நிலைக்கு சென்ற முன்மாதிரியாகும்.
ஆனால் இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் அவ்வாறான சாதகமான எந்த நடவடிக்கையையும் நாங்கள் இதுவரை காணவில்லை. ஈரான் கப்பல் நாட்டுக்குள் வருவதற்கு 11 மணித்தியாலம் வரை அனுமதி வழங்காமல் இருந்தது, வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையிலா என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் முதலாவது கப்பல் தாக்கப்படும்வரை காத்திருந்துவிட்டு, ஈரானின் இரண்டாவது கப்பலுக்கு உடனடியாக அனுமதி வழங்கியிருந்தது, அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையின் பிரச்சினையால் ஏற்பட்ட நிலையா என்ற பிரச்சினை எமக்கு இருக்கிறது.
மேலும் எமது வெளிநாட்டு கொள்கையில் வேறு தரப்பினரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இது இலங்கையில் சுயாதீனத்தன்மை தொடர்பான பாரிய பிரச்சினையாகும்.இதன்போது எமது நாட்டுக்குள் செயற்பட வேறு நாட்டின் அனுமதியை பெற்றுக்கொண்டு செயற்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? இது பாரிய பிரச்சினையாகும். சர்வதேச ஊடகங்களிலும் எமது வெளிநாட்டு கொள்கை தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
எனவே இந்த யுத்தத்தின்போது நாங்கள் நாடுநிலையாக இருந்தாலும் உறுதியான வெளிநாட்டு கொள்கை இருக்க வேண்டும். வரலாற்றில் எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும் வெளிநாட்டு கொள்கையில் நாட்டுக்கு கெளரவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்து வந்துள்ளது என்றார்.