இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் இந்த உயர்மட்ட விஜயமானது வெறும் சம்பிரதாய நிகழ்வாக அமையாமல், பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கீதாநாத் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்:
இலங்கைத் தமிழ் அகதிகள்: தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்துப் பேசப்பட வேண்டும். அவர்கள் கௌரவமான முறையில் தாமாக முன்வந்து நாடு திரும்புவதற்கு (Voluntary return) இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
பாதுகாப்பான மீள்வருகை: நாடு திரும்பும் அகதிகள் இலங்கையில் எவ்வித துன்புறுத்தல்களுக்கோ, அச்சுறுத்தல்களுக்கோ அல்லது நிர்வாகச் சிக்கல்களுக்கோ ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மீனவர் விவகாரம்: பாக்கு நீரிணைப் பகுதியில் தமிழக மற்றும் வட மாகாண மீனவர்களுக்கு இடையே நிலவும் மோதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு ஒரு நியாயமான மற்றும் நிலையான தீர்வை இரு அரசாங்கங்களும் எட்ட வேண்டும்.
போக்குவரத்து மற்றும் கலாசாரத் தொடர்பு: தமிழ்நாட்டிற்கும் இலங்கையின் வட மாகாணத்திற்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில், இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்புகளை (Connectivity) அதிகரிக்க வேண்டும்.
“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் இந்த உறவுக்கு கடல் ஒரு தடையாக இருக்கக்கூடாது” என்று சுட்டிக்காட்டிய அவர், அகதிகள் விவகாரம் மற்றும் மீனவர் பிரச்சினைக்குக் காலக்கெடுவுடன் கூடிய ஒரு தெளிவான தீர்வை இந்த விஜயத்தின் ஊடாக எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.