சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், பணியகத்தின் எந்தவித அனுமதியுமின்றி சமூக ஊடகங்கள் ஊடாக கலந்துரையாடல்களை நடத்தி இந்தப் பண மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலி விளம்பரங்கள்.
அவற்றுக்கு பணியகத்தின் அனுமதி பெறப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து, சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி உதவியாளர் வேலைகள் வழங்குவதாகக் கூறி, 76 இலட்சம் ரூபா வரையான பணத்தை மோசடி செய்த ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் நேற்று (30) கைது செய்துள்ளனர்.