நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண்ணொருவரும், ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
களுபோவில – தெஹிவளை வீதியில், களுபோவில பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் முதலாவது கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தெஹிவளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வேறு வீதிக்குத் திருப்ப முற்பட்ட போது, எதிர்த்திசையிலிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்தவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். இது தொடர்பில் கொஹுவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, மதவாச்சி – கெப்பித்திகொல்லேவ வீதியின் ஹீரல்லுகம பிரதேசத்தில், ஹீரல்லுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையிலிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஆண் ஓட்டுநர் ஒருவரும், பெண் ஓட்டுநர் ஒருவரும் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பின்னால் பயணித்த இருவருமாக நால்வர் பலத்த காயமடைந்து கெப்பித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் நால்வரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பெற்று வந்த பெண் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் எடவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணாவார். இது தொடர்பில் எடவீரகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.