நெத்த வெனுவட்ட எத்த” (இல்லாததற்குப் பதிலாக உண்மை) என்ற புத்தகத்தை அச்சிட்டதன் மூலம் புலமைச் சொத்து சட்டத்தை மீறிய குற்றத்துக்காக, டில்வின் சில்வாவுக்கு 1 மில்லியன் (10 இலட்சம்) ரூபா பணத்தை நட்டஈடாக செலுத்துமாறு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் முன்னாள்அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு விதித்த உத்தரவை மேன் முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (9) உறுதி செய்துள்ளது.
நீதிபதிகளான ஜனக் டி சில்வா, ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
இநிலையில் குறித்த தீர்ப்புக்கு எதிராக விமல் வீரவன்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த நீதிபதி ஷிரான் குணரத்ன, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இழப்பீடு செலுத்துமாறு தெரிவித்த உத்தரவி்ல், மேன் முறையீட்டு நீதிமன்றம் தலையிடாது என தனது தீர்மானத்தை அறிவித்திருந்தார். அத்துடன், புத்தகத்தில் உள்ள டில்வின் சில்வாவுக்குச் சொந்தமான ஜே.வி.பி ஆவணங்களை மீண்டும் அச்சிட்டு விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் விமல் வீரவன்சவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இவ்வழக்கில் டில்வின் சில்வா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், விமல் வீரவன்ச சார்பில் சட்டத்தரணி நிஷான் பிரேமதிலகவும் முன்னிலையாகியிருந்தனர்.