யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக, தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கு சென்ற இலங்கை பிரஜை ஒருவர் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் புழல் சிறையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக பதுங்கியிருப்பதாக, கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று சனிக்கிழமை (08) அதிகாலை இராமேஸ்வரம் பஸ் நிலையத்திற்கு அருகே முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இலங்கை பிரஜையிடமிருந்து இலங்கை பணம், கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை என்பன கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அவர் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, நடராஜன் வீதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான இலங்கை பிரஜை கடந்த 6ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சட்ட விரோதமாக, படகில் நாகைப்பட்டினம் – வேதாரண்யத்தை சென்றடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்திலுள்ள மண்டபம் அகதிகள் முகாமிலுள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சந்தேக நபரான இலங்கை பிரஜை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரான இலங்கை பிரஜையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, பரமக்குடி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.