முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்று கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே அமளி நிலவிய நிலையில் சபை உறுப்பினர்கள் சிலர் சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த சத்தியமூர்த்தி சத்தியவரதன் (உபதபிசாளர்), செல்லையா அமிர்தலிங்கம், தமிழரசுக் கட்சியை சேர்ந்த வைரமுத்து ஜெயரூபன், சிவஞானசுந்தரம் நிக்சன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த நடராசா மகிந்தன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
13 உறுப்பினர்களை கொண்ட இந்தசபையின் இன்றைய அமர்வில் 10 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த நிலையில், அவர்களில் ஐவர் வெளிநடப்பு செய்ததையடுத்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சபை கூட்டத்தினை நடத்த முடியாது என தவிசாளர் அறிவித்து, கூட்டத்தினை 15 நாட்களுக்கு பிற்போட்டார்.
வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இன்றையதினம் சபையின் 4ஆவது அமர்வு நடைபெறுகிறது. ஆனால், இதற்கு முன் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சபை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் திணைக்களங்களுக்கு அனுப்பப்படாததுடன், அவற்றை செயல்படுத்துவதிலும் தவிசாளர் அலட்சியம் காட்டி வருகிறார்.
அடுத்த 14 நாட்களுக்குள் முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அனுப்பினால் அடுத்த அமர்வில் கலந்துகொள்வோம்,” என தெரிவித்தனர். உபதபிசாளருக்கு எந்தவித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. தவிசாளர் தன்னிச்சையாக அனைத்து பொறுப்புக்களையும் தன்னகத்தே வைத்துள்ளார்.