கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி தனது பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானத்திற்கு மாறாக சோஹாரா புகாரி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக தனது வாக்கை அளித்திருந்தார்.
இந்தச் செயற்பாடானது கட்சி ஒழுக்கத்தை மீறும் செயல் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதியது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் சோஹாரா புகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஊடாக தற்போது வெளியிட்டுள்ளார்.