சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று செவ்வாய்க்கிழமை (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயமானது, சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கையின் அங்கத்துவம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த சந்திப்பின்போது, அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தற்போதைய நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவிற்கும், நாட்டின் கடன் மறுசீரமைப்புச் செயல்பாடுகளை நிறைவு செய்ய வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஆளுநர் வீரசிங்க, இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், நாணயக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் நிதித்துறை கொள்கைகள் போன்ற துறைகளில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொழிநுட்ப உதவிகளையும், இதன்போது அவர் பாராட்டியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய முன்னேற்றத்தை ஒரு வெற்றிக் கதை என குறிப்பிட்ட கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை மீட்டெடுப்பதில் மத்திய வங்கி ஆற்றிய வகிபங்கினையும் பாராட்டியுள்ளார்.
கடந்த சில வருடங்களில் நாடு எதிர்கொண்ட பின்னடைவுகளைச் சுட்டிக்காட்டிய அவர், தேவையான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுத் தொடர்ச்சியாகப் பேணப்பட்டால், இலங்கை உயரிய பொருளாதார வளர்ச்சியை எட்டும் நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.