மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம், மதுவரி திணைக்களத்தின் 7 அதிகாரிகள் அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்று (12) தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் தலா 75,000 ரூபாய் வீதம், ஏழு அதிகாரிகளும் இணைந்து தமது தனிப்பட்ட பணத்திலிருந்து மொத்தம் 525,000 ரூபாய் நஷ்டஈட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நஷ்டஈட்டுத் தொகையை, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரணை செய்த ஜனக் டி சில்வா, சம்பத் அபேகோன் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் மேனகா விஜேசுந்தர இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி, தனது உணவகத்திற்கு வெளியே ஏதோ சலசலப்பு ஏற்படுவது கேட்டதாகவும், அதற்கமைய நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களைப் பரிசோதித்ததாகவும் மனுதாரர் தெரிவித்தார்.
இதன்போது, பிரதிவாதிகளில் சிலர் தனது ஊழியர்களைத் தாக்கும் காட்சியைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் தனது நிறுவனத்திற்குள் புகுந்த அந்த அதிகாரிகள், தாம் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு, தடிகளால் தம்மைத் தாக்கியதாகவும், பின்னர் பெட்சீட் ஒன்றால் கண்களைக் கட்டித் தாக்கியதுடன், மதுபானப் போத்தல்கள் குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இந்தச் செயலின் மூலம் பிரதிவாதிகளான மதுவரி திணைக்கள அதிகாரிகள் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என ஏகமனதாகத் தீர்ப்பளித்தது.
இந்தச் சட்டவிரோதச் செயல் மூலம், பிரதிவாதிகள், மனுதாரருக்கு சட்டத்தின் முன் சமமான பாதுகாப்புப் பெறுவதற்கான அடிப்படை உரிமையை மீறியுள்ளனர் என்றும் நீதியரசர்கள் குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இங்கு மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி நிலுகா திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் முன்னிலையானதுடன், பிரதிவாதிகள் தரப்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க முன்னிலையானார்.