மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார்.
இதனையடுத்து குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப் பகுதி, வலசை பறவைகள் வந்து தங்குமிடம் எனவும் , மைதானம் அமைக்கப்பட்டால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும். எனவே மைதானம் அமைக்கப்படக் கூடாது என இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர், யாழ். மாவட்ட மேலதிக செயலர் , வட மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளர் , வேலணை பிரதேச செயலாளர், தவிசாளர், இலங்கை கிரிக்கெட் சபை இணைப்பாளர், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், நீர்வளச் சபை உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், வனவளத்திணைக்கள பிராந்திய உத்தியோகத்தர், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், நகர அதிகார சபை உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ். மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தினர் உள்ளிட்டோர் மைதானம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.