யாழ்ப்பாணத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீடொன்றினுள் புகுந்து ஒரு தொகை நகைகளைக் கொள்ளையடித்ததுடன், வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் (ஞாயிற்றுக்கிழமை(08) மூன்று முகமூடிக் கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதன்போது, வீட்டின் உரிமையாளர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள், அவரைக் கடும் காயங்களுக்கு உள்ளாக்கினர். பின்னர், அவரது மனைவியைக் கத்தி முனையில் அச்சுறுத்தி, அவரிடமிருந்த சுமார் 5 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தின் போது காயமடைந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய வேளையில், வீட்டின் உரிமையாளர் தற்காப்பிற்காக அவர்களைத் திருப்பித் தாக்கியுள்ளார்; இதில் கொள்ளையன் ஒருவன் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவொன்றில் (CCTV), கொள்ளையர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாருக்கும், பொலிஸ் அவசர சேவைப் பிரிவினருக்கும் உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும், “பொலிஸார் சுமார் 08 மணித்தியாலங்கள் தாமதித்தே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.