மக்களின் பணத்தில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு கடந்த அரசாங்கங்களில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் 36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த தினம் நேற்று (13.11.2025) விகாரமாதேவி திறந்த வெளியரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். மேலும் அது தொடர்பில் உரையாற்றிய அவர்,
அண்மையில் இராணுவ புலனாய்வாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போது, மக்களின் வரிப்பணத்தில் அதாவது ஒரே வங்கி கணக்கில் இரு வேறுப்பட்ட இனவாத குழுக்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு பணம் கொடுத்து, சிங்கள மக்களுக்கு எதிராக போராடுங்கள். அதேபோல சிங்கள அடிப்படைவாதிகளக்கு பணம் கொடுத்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக போராடுங்கள் என்றவாறு அரசாங்கத்தின் பணத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தங்களின் இருப்புக்காக பயன்படுத்தினர். ஒவ்வொரு இனத்திற்கும் இனப்பற்றும் உரிமையும் இருக்கிறது.அதை உசுப்பேற்றி குழப்பி தீ மூட்டி ஏனைய பிரச்சினைகள் அனைத்தையும் மழுங்கடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
நாங்கள் அரசாங்கத்தை பாரமெடுத்த நாள் முதல் நாட்டில் எங்கேயும் இனமுறுகல்கள் ஏற்படவில்லை.இவை தான் நாம் செய்த மக்கள் நல்லிணக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் நாட்டின் இன ஒருமைப்பாட்டில் பெரும் குழப்பம் நிலவிய காலம் இருந்தது. எங்காவது சிறு குழப்பம் ஏற்பட்டால் ஏதோ ஒரு பள்ளி, விகாரை உடைக்கப்பட்டு பதற்றம் உருவாக்கப்பட்டது.